Saturday, August 21, 2010

சட்டக்கல்லூரி மாணவர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூர தாக்குதலும், சென்னையை ஸ்தம்பிக்க வைத்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டமும் .


அசோக்குமாரை தாக்கிய காவல்துறை
17.08.2010 செவ்வாய் கிழமை அன்று சென்னை சட்ட க்கல்லூரியில் 4ம் ஆண்டு படிக்கும் மாணவர் அசோக் குமார் செங்கல்பட்டு அருகே உள்ள திருக்களுக்குன்றம் என்ற ஊரில் உள்ள காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்களால் கொடுரமாக தாக்கப்பட்டு, மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தற்போது அப்பலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த மாணவர் 'தமிழக மக்கள் உரிமை கழகத்தின்' காஞ்சிபுர மாவட்ட பொறுப்பாளர் என்பதும் அவர் காவல் துறையின் அத்துமீறல்களை பலமுறை கண்டித்திருக்கிறார் என்பதும் காவல்துறை அந்த மாணவரை பலி வாங்க காத்திருந்தது என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. காவல் துறையினர் அடித்த அடியில் மேல்தாடையில் பல் உடைந்திருக்கிறது , உதடு கிழிந்திருக்கிறது , பாதத்தில் தோல் உரிந்திருக்கிறது , தலை, தொடை, கழுத்து, என உடம்பில் பல பாகாங்களில் காட்டுமிறாண்டிதனமாக தாக்கி உள்ளனர்.


சட்ட க்கல்லுரி மாணவர்கள் கொதிப்பு
மாணவர் காவல் துறையினரால் தாக்கப்பட்ட சம்பவமானது சென்னை சட்ட க்கல்லூரி மாணவர்களை கொதிக்க வைத்தது. அவர்கள் அந்த செய்தியை கேட்டவுடன் மாணவர்கள் தன்னெழுச்சியாக திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர் . அதுவும் பாரிஸ் கார்னரில் இரண்டு இடங்களில் சாலையை மறித்ததால் வட சென்னை , தென்சென்னை ,மத்திய சென்னை என்று அனைத்து பகுதியிலும் போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டது. காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணி வரையிலும் சுமார் ஆறு மணி நேரம் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் .
மறியல் போராட்டத்தை கண்டு அஞ்சி நடுங்கிய காவல் துறை
சென்னையில் மிகவும் வாகன நெருக்கடி மிகுந்த இடம் பாரிஸ் கார்னர். இதில் உயர்நீதி மன்றம் , பிராட்வே என்ற இரண்டு பேருந்து நிலையங்களுக்கும் உட்பட்ட இரண்டு சாலைகளும் மறிக்கப்பட்டதால் ஒட்டுமொத்தமாக போக்குவரத்து சேவையே ஸ்தம்பிதது. பொதுமக்கள் அவதிக்கு உள்ளான போதும் காவல் துறை அம்மாணவர்களை கைது செய்யவோ , கலைந்து போகச்செய்யவோ இல்லை தேர்தல் நெருங்குவதால் இது மீண்டும் வழக்கறிஞர்கள், சட்ட மாணவர்கள் போராட்டமாக மாறி விடுமோ என்ற பயம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டு விட்டதை தான் இது காட்டுகிறது.

காவல் துறையின் மாறாத்தன்மை
இன்றைய காவல் துறையானது பிரிட்டிஷ் காவல்துறை எப்படி இருந்ததோ அப்படியே இம்மியும் மாறாமல் இன்றும் இருக்கிறது. பிரிட்டிஷ் காலத்திலாவது காவல்துறையில் லஞ்சம் என்பது இன்று உள்ளதை போல இல்லை. ஆனால் ஸ்காட்லாந்து காவல் துறைக்கு இணையாக வைத்து போற்றபடும் தமிழக காவல் துறை குற்ற வழக்குகளை கண்டு பிடிப்பதில் முதன்மை வகிகின்றதோ இல்லையோ, அதிகமாக லஞ்சம் வாங்குவதில் துறை ரீதியாக முதன்மை வகிக்கின்றது.

சட்டத்தை மதிக்காதவர்கள் யார்?

அமைச்சர்கள், சில பணக்கார பத்திரிகையாளர்கள் அடிக்கடி ஒரு வாசகத்தை கூறுவதுண்டு ‘வழக்கறிஞர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுக்க கூடாது , அவர்களும் சட்டத்திற்கு உட்பட்டவர்களே என்று சொல்வார்கள்’. இது எவ்வாறு முழுக்க முழுக்க பொய்யோ, அதை போலவே காவல் துறை சட்டப்படி தனது கடமையை ஆற்றுகிறது என்பதும். காவல் துறை மட்டுமல்ல நமது ஆட்சியாளர்களும் சட்டத்தையும், நீதிமன்றங்களையும் மதிப்பதில்லை என்பதே உண்மை ஆகும். உண்மையிலேயே அவர்கள் தான் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்து கொண்டு தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள். எந்த சட்டம் ஊழல் செய்யவும், கையாடல், மற்றும் இன்ன பிற முறைகேடுகளையும் செய்யச்சொல்கிறது என்று தெரியவில்லை. அது அவர்களுக்கே வெளிச்சம்.
மனித உரிமைகளுக்கு சாவு மணி அடிக்கும் காவல்துறை
காவல்துறைக்கு பல சட்ட வழி காட்டுதல்கள் உண்டு, மனித உரிமை ஆணையம் வகுத்திருக்கும் வழிமுறைகள், மற்றும் ‘டி.கே.பாசு - எதிர் - மேற்கு வங்காள அரசு’ என்ற வழக்கில் தெளிவாக வரையறுத்துள்ள வழிமுறைகளையோ காவல் துறை அதிகாரிகள் மதிப்பதும் இல்லை, கிஞ்சித்தும் பின்பற்றுவதும் இல்லை. அவர்களுக்கு தைரியம் கொடுப்பவர்கள் எல்லாம் அரசியல் கட்சியினர் தான் ஏனெனில் எந்த அரசுமே ஆட்சியை தங்கள் சுயலாபத்திற்கு பயன்படுத்த முழுக்க, முழுக்க நம்பி இருப்பது காவல் துறையை தான்.

கள்ளக்கூட்டு போடும் காவல்துறை

அரசு என்பது ஒடுக்கு முறை கருவி எனும் போது அது அதன் பிரதிநிதியாக வைத்திருப்பது காவல் துறையை தான். இந்த சம்பவத்திற்கு எந்த அரசியல் கட்சியுமே காவல் துறையை கண்டிக்க வில்லை. ஏன் என்றால் இவர்களோடு கூட்டு சேர்ந்து கட்டை பஞ்சாயத்து செய்து காசு பார்ப்பதே இவர்களின் இப்போதைய முக்கியமான தோழில். அத்தோடு இவர்கள் செய்யும் அனைத்து குற்றவியல் வேலைகளுக்கும் காவல் துறையின் ஆசியும், பங்கும் அவசியம் தேவை. இதை பொது மக்கள் தெளிவாக புரிந்து கொண்டார்களானால் இவர்கள் தேர்தலின் போது ஓட்டு கேட்டு மக்களிடம் செல்லவே முடியாது. மக்களை இவர்கள் பல வழிகளிலும் தாங்கள் தான் மக்களுக்கு உண்மையான எதிரி என்பது தெரியாமல் திசை திருப்பி வைத்துள்ளனர்.
வழக்கறிஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி!
வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே காவல் துறையினரால் கண்மூடி தனமாக தாக்கப்பட்டனர், நீதி மன்ற வளாகங்களும் , வாகனங்களும் , கண் முடி தனமாக அடித்து நொறுக்க பட்டது, நீதிபதிகளும் தாக்கப்பட்ட ஒரு மிக கேவலமான சம்பவம் நடைபெற்றது. ஆனாலும் ஆட்சியாளர்கள் ஒரு போதும் அதற்கு காரணமான அதிகாரிகள் மீது இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை. உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட வேலை நீக்க பரிந்துரையையும், அரசு செய்யாமல் உச்ச நீதிமன்றத்திலே மேல் முறையீடு செய்து காவல் துறையினரை பாதுகாக்கும் பணியை செய்துள்ளது. இது போலவே அரசு தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு தருணத்திலும் நீதிமன்ற உத்தரவுகளை கிள்ளு கீரையாக மதிக்கும் நிலை வேறு எந்த நாட்டிலும் இல்லை எனலாம்.

காவல்துறை யாருக்கு நண்பன் ?
இன்றைய காவல் நிலையங்கள் பெரும்பான்மையானவை பணம் காட்சி மரங்கலாகவே இருக்கின்றன. புகார் கொடுப்பவரிடம் இருந்தும் , யார் மீது புகார் அளிக்க பட்டதோ அவர்களிடம் இருந்தும், பணத்தை கறந்து கொண்டு இருவரையும் மிரட்டி அனுப்பும் வேலையை தான் இன்றைய காவல் துறை செய்து கொண்டு இருக்கிறது . காவல் துறை மக்களின் நண்பன் என்று சொல்வது மிகப்பெரிய ஏமாற்று வேலையாகும். இது எப்போதும் நியாயமான போராட்டங்களை ஒடுக்கும் வேலையை தான் செய்து வருகிறது மனித உரிமை , அரசியலமைப்பு சட்டம் வழங்கும் அடிபடை உரிமை, என்று எந்த உரிமையையும் சாதாரண மக்களுக்கு வழங்காமல் தங்களிடம் சிக்குபவர்களை சிதறு தேங்காய் போடும் வேலையை கண கச்சிதமாக செய்து வருகிறது நமது காவல் துறை. நமது ஆட்சியாளர்களுக்கு அது ஒரு ஏவல் துறை ஆகும். தாங்கள் வைத்தது தான் சட்டம், எங்களால் எதையும் செய்ய முடியும், நிரபராதியை குற்றவாளியாக்க முடியும், குற்றம் செய்தவனை காக்கவும் முடியும். ஒருவனை ரவுடி என்று என்கவுண்டர் செய்யவும் முடியும் கொலை குற்றம் செய்தவனுக்கு பாதுகாவல் வேலையும் செய்ய முடியும் என்று தலை கொளுத்து காவல் துறை ஆடுகிறது. கஸ்டடி மரணங்கள் பல நடந்தும் அவை பல மறைக்கப்பட்டும் , சில அர்.டி.ஒ விசாரணையில் தூங்குவதும், நமது நாட்டில் வழக்கமான ஒன்றாகி விட்டது என்றே சொல்லலாம். அதை எதிர்த்து கேட்பதும் , நியாயம் கிடைக்க போராடுவதும் , அந்த போராட்டங்கள் சட்ட விரோதமாக நசுக்கபடுவதும் தான் இன்று நடைபெற்று வருகிறது. நமது சட்ட கல்லூரி மாணவர்கள் அந்த நடைமுறைக்கு தங்களின் நேர்மையான போராட்டம் மூலம் ஒரு முற்று புள்ளி வைத்து உள்ளனர்.

கருத்துரிமைக்கு சாவு மணி அடிக்கும் காவல்துறை!
இன்று காவல் தூறையினர் அரங்க கூட்டங்களுக்கே காவல் தூறையின் அனுமதி வாங்க வேண்டும் என்ற நிலைக்கு கொண்டு வந்து எந்த ஒரு கருத்தும் அரசுக்கோ, ஆட்சியாளர்களுக்கோ எதிராக திரும்ப கூடாது என்பதில் கவனமாக கருத்துரிமை பறிக்கும் வேலையை செய்து வருகின்றது. போராட்டம் நடத்த வேண்டும் என்றால் மனிதர்களே இல்லாத இடமாக பார்த்து கண்டன ஆர்பாட்டம் நடத்த அதுவும் பலகட்ட போரட்டங்களுக்கு பிறகே அனுமதி கிடைக்கின்றது.

மாணவர்கள் கிளர்ந்தெழுந்தனர்!
அந்த நிலையில் தான் மாணவர்கள் போராட்டம் யாரையும் சார்ந்திராமல் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது . இது சட்ட கல்லுரி வரலாற்றிலே பொன் எழுத்துகளால் பொறிக்க வேண்டிய செய்தி ஆகும். சட்ட கல்லுரி மாணவர்கள் 2008 ஆண்டில் மாணவர்களுக்குள்ளேயே இரு பிரிவாக பிரிந்து அடித்து கொண்டது பொது மக்களுக்கு அவர்கள் மீது இருந்த மரியாதையை இழக்கும் விதமாக இருந்தது. அத்தோடு இரு வருடங்களாக எந்த வித போராட்டமும் செய்யாமல் மாணவர்கள் முடங்கி கிடந்தனர் என்றே சொல்லலாம். இந்த போராட்டத்தின் மூலம் சக மாணவன் காவல் துறையை சேர்ந்தவர்களால் கண்முடித்தனமாக தாக்கப்பட்ட போது கொதித்தெழுந்து ஆளும் அரசுக்கு எதிராக அந்த சட்ட விரோத காவல் துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய வைத்திருப்பது என்பது சாதரான செய்தி அல்ல. ஏன் என்றால் இது போலவே பல முறை மாணவர்கள் காவல் துறையின் அத்து மீறலுக்கு எதிராக கலம் இறங்கி போராடி எந்த விதமான தீர்வும் கிடைக்காமல் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டி இருந்தது.

நீதிமன்ற உத்தரவு
இந்த போராட்டத்தில் இறுதியாக சட்ட கல்லூரி மாணவர்கள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டவுடன் அந்நீதிமன்றம் உடனே காஞ்சிபுர மாவட்ட காவல் துறை உயர் அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமித்தது அத்தோடு திருக்களுக்குன்றம் காவல் நிலைய அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டது. அத்தோடு அம்மாணவரை உடனடியாக பெற்றோர் பார்க்கவும் , அவருக்கு நல்ல சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டது.

துருவ நட்சத்திரங்கள்
மாணவர்கள் என்பவர்கள் வருங்காலத்தை தீர்மானிக்க போகும் பாரதத்தின் விலை மதிக்க முடியாத வைரங்கள். இன்று அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி என்பது அவர்கள் தேர்விலே வெற்றி பெற மட்டுமே உதவகூடியதாகவும் , வாழ்க்கை தேர்வில் தேரமுடியாதவர்களாகவும் ஆக்குகிறது. அகத்தேர்வு முறையானது மாணவர்கள் முதுகெலும்பை முறிப்பதாகவும், அவர்களின் போராட்ட குணத்திற்கு சவால் விடுவதாக்கவுமே உள்ளது. அந்த நிலையை தகர்த்து இலங்கை தமிழர் பிரச்சனை , நாட்டில் நடக்கும் அநீதியை தட்டி கேட்பதாகட்டும் , காவல் துரையின் அராஜக போக்கை கண்டிபதகட்டும் எதிலுமே எப்போதும் முதல் இடத்தில் இருப்பவர்களும் , முதலில் குரல் கொடுப்பவர்களாக இருப்பவர்களும் சட்ட கல்லுரி மாணவர்களே.

புறக்கணித்த செய்தி நிறுவனங்கள்
சட்ட கல்லுரி மாணவர்கள் இந்த ஆளும் சந்தர்ப்பவாத, அடக்குமுறையை கட்டவிழித்து விட்டிருக்கும் மக்கள் விரோத அரசுக்கு எதிராக 6 மணி நேர மறியல் போராட்டம் என்பது நடைமுறையில் சாத்திய படாத ஓன்று. அத்தோடு மற்ற சட்ட கல்லூரிகளான சேலம், மதுரை, திருச்சி, செங்கல்பட்டு சட்ட கல்லூரி மாணவர்களையும் திரண்டெழுந்து போராட வைத்தது. அதை போலவே ஒவ்வொரு கல்லூரியிலும் போராட்டம் பரவி விடும் என்ற நோக்கத்தில் தான் எந்த மீடியாவும் இந்த செய்தியை முக்கிய செய்தியாக வெளிவிடவில்லை. அதுவும் சில மீடியாக்கள் அந்த உண்மையை திரித்தும் , புரட்டியுமே அரைகுறை செய்தியை வெளியிட்டன. இதில் இருந்தே அனைத்து செய்தி நிறுவனங்களும் அரசாங்கத்தின் விரல் அசைப்பில் ஆடுகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும். மாணவர்களின் நேர்மையான போராட்டமானது எந்த அடக்கு முறை கருவிக்கும் கட்டுப்பட்டதல்ல என்பதே வரலாறு காட்டும் உண்மை. அகவே தான் மாணவர்கள் அரசின் அடக்குமுறையை உடைத்து எரிந்து மாணவர் சக்தி எழுந்தால் அது எந்த அரசையும் ஆட்டுவிக்கும் சக்தி கொண்டது என்பதையும், மாணவர்கள் அச்ச மற்றவர்கள் என்பதும் நிரூபிக்கப்பட்டது.

மாணவர்கள் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறும்
போராட்டம் என்பது நாமே வலிந்து ஏற்பதல்ல, அது நம் மீது வன்முறையாக திணிக்கபடுகிறது. அதை போலவே போராட்ட வடிவமும் சந்தர்ப்பத்தை பொறுத்து மாறுகிறது. அதுவும் இளம் மாணவர்கள் போராட்டமானது எந்த வலிமை மிக்க அரசாங்கதையும் ஆட்டுவிக்கும் வல்லமை கொண்டது என்பது ஜெயபிரகாஷ் நாராயண் தொடங்கிய ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை போலவே இதுவும் காவல் துறை அத்துமீறல்களுக்கு எதிராக வலிமையான மாணவர்கள் போராட்டமாக மாற வேண்டும் . அப்போது தான் காவல் துறை லத்தியை ஓங்கும் போது கொஞ்சம் புத்தியையும் தீட்டும். எந்த சமூகத்தில் மாணவர்கள் எழுச்சி மிக்கவர்களாகவும், அநீதி எங்கு நடந்தாலும் தட்டி கேட்கின்றனரோ, அந்த சமூகமே ஒரு நல்ல விழிப்புணர்வு நிரம்பிய சமூகமாக இருக்கும். நமது மாணவர்கள் அதை போராட்டங்கள் மூலம் கண்டிப்பாக சாதிப்பார்கள்.

Comments :

0 comments to “சட்டக்கல்லூரி மாணவர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூர தாக்குதலும், சென்னையை ஸ்தம்பிக்க வைத்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டமும் .”


Post a Comment